Tuesday, 27 January 2015

ஆரீபு காக்காவும் ரஸூல் ஊதுபத்தியும் - தொடர்கதை -3

குறிப்பு :பாத்திரங்களும் சம்பவங்களும்  கற்பனைகளே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல .

                               


     "முஸ்தபா மாமாவும் அத்தாவும் ஒருவழியா கொழும்பு போய் சேந்துட்டாங்க.பின்னாடி  அத்தாக்கு நாராமலயுல கடைனா முஸ்தபா மாமாவுக்கு திரிகோணமலயுல கடை ".

     "முஸ்தபா மாமா என்னோட சின்ன வயசுல சிலோன்லேர்ந்து  ஊருக்கு  வந்து இறங்குறப்ப  எல்லாரு கண்ணும் அவரு மேல தான் இருக்கும். மாமாவோட ஊட்டுக்காரவ சொவரா மாமி. அது  சரியான சண்ட காமாட்சி ".

          "ஊருல எல்லா பொண்டுவ கூடயும்  போடாத சண்ட கெடயாது. காலயுல பால் ஊத்துற மஞ்சக்குடி அஞ்சல கிட்ட  பாலுல தண்ணி கலந்ததுல சண்ட , பக்கத்துல இருக்குற மூக்கனா ஊடு ,மண்டயாட்டி ஊடு, எதுத்த ஊட்டு சைனம்பு வரைக்கும் அத்தன பேரோடயும்  சாக்கட தண்ணி  போற தூப்பாக்குழி சண்ட தான். அவுங்க ஊட்டு சாக்கட தண்ணி சொவரா மாமி ஊட்டு வாசல நனச்சு ஒரே மூத்தர வாடயாயிடும்  ".

                     அப்புறம் மாமி இப்டி தான் சாக்கட சண்டய ஆரம்பிக்கும். "உன் ஊட்டு சாக்கடய உங்கூட்டு நடுதிண்ணயுல உட வேண்டியது தானடி " .

    சண்ட உச்சகட்டமாச்சுனா மாமி ஆம்புள மாதிரியே ஆயுடும். காத கொடுத்து ஒரு வார்த்த கேக்க முடியாது .

      "சொகரா மாமி ஊட்டு மேல சின்ன பய ஒருத்தன் கல்ல உட்டு ஓட்ட  ஒடச்சதுல பதிலுக்கு பதிலு   சொவரா மாமி அவனோட  மண்டய உடச்சது ".

ஆனா மாமி சண்ட போடாத ஒரே ஆளு முஸ்தபா மாமா தான். மாமா மேல கொல்ல  புரியம்.

      "முஸ்தபா மாமா ஊருக்கு வந்த அடுத்த நாளு சுடுதண்ணிய மாமி சுடவச்சு கொடுக்கும். அதுல குளிச்சுட்டு மாமா சிலோன்லேர்ந்து கொண்டு வந்த புது மார்ட்டின் வெள்ள சட்டயுல  குண்டூசிய கிழட்டிட்டு சட்டய மாட்டிக்குவாரு . குதிர மார்க்கு கைலிய சட சடனு இருக்கும்னு சொல்லி  மாமி முன்னமே தண்ணில ஊர வச்சு காயவச்சுரும். மாமா குதுர கைலிய கட்டிக்கிட்டு சிலோன் பிராண்டு பச்ச பெல்டும் இடுப்புல கட்டிக்குவாரு. பாக்கெட்ல 10 ரூவா நோட்ட வச்சார்னா மார்ட்டின் சட்டயுல ரூவா நோட்டு கண்ணாடி மாரி தெரியும். அப்ப பத்து ரூவால கொல்ல சாமான் வாங்கலாம்".

                       


       "மாமா வாயுல எப்போதும் செய்யது பீடி எரிஞ்சுகிட்டே  இருக்கும் . படுக்கயுல மட்டுந்  தான் மாமாவும் பீடியும் தனி  தனியா படுப்பாக. அவுகளுக்குள்ள  அவ்ளோ ஒரு  ஒரு சினேகம்".

      "மாமா மார்க்கெட்ல மீனு வாங்க போற டிசைனே தனி. மல்லியப்பூ அத்தர் , மான் மார்க்கு கொட னு அசத்துவாரு. அவரு சிங்களத்துல மீன் வெலய சியாய் னும்  பனஸ் ஹத்ராயுனும்  கொடய வச்சு மீன ஏலத்துல கிண்டுவாரு . கையுல எடுத்தா நாறுமுல ? னு வியாக்கியானம் சொல்லுவாரு." .

        "சொவரா மாமி  மாமாவுக்கு அப்பப்ப முச்சந்தி மண்ண எடுத்து ஏழு மொளகா , கொஞ்சம் உப்பு  வச்சு 11 தடவ பாத்தியா ஓதி கண்துஸ்டி கழிக்கும். அது மேல  மாமாவ எச்சி துப்ப சொல்லும். அப்புடி துப்புணா எல்லா கண்ணும் ஓடிடும்னு சொல்லும். மேக்கொண்டு அவுக ஊட்டு முச்சந்தில அந்த மொளகா ,உப்ப பேப்பர்ல மடிச்சு  நாலு கண்ணு வச்ச  கொட்டாங்கச்சி வச்சி எரிச்சிவிடும். போற வர்றவக  அந்த நெருப்ப பாத்தா கண்திஸ்டி போயிடும்னு மாமி சொன்னதா ஞாபகம்".

"மாமா ஊருக்கு  வந்தாருனா ஊட்டுல மகுரிபு நேரம் ஆச்சுனா ஒரே  எச்சி துப்புற சத்தமும் ,  முச்சந்தில நெருப்பு எரிச்சு உடுறதுதான் சொவரா மாமிக்கு வேல".

             "அத்தன நாளா அன்னோன்யமா இருந்த மாமாவும் , மாமியும். அன்னக்கி  சிங்களத்தானும்  எல் டி டி இ காரணுவளும் அடிச்சுக்குற மாதிரி அடிச்சிக்கிட்டாக . மாமா அந்த சபுரு பயணம் வந்து இறங்குனப்ப தெருவே அல்லோல பட்டுகிரிச்சி. ஏன்னா மாமா அன்னக்கி கொழும்புலேர்ந்து  எரக்குனது மொத்தம் அஞ்சு உருப்படி .  மூணு  உருப்படியலுவல்ல  புள்ளவளுக்கு  துணிமணினா .  மீதி ரெண்ட  கொழும்புலேர்ந்து  புள்ளையளாவே இறக்கிவுட்டாரு . புரியலாயா ? மாமாவோட திரகோணமல குடும்பத்துல உள்ள ரெண்டு பொம்பள புள்ளகளா அந்த வருசம் கந்திரி கூடு பாக்க கூட்டிட்டு வந்தாரு. ".


              "கோட்டபட்டணம் ராவுத்தர் அப்பா கூடுனா சுத்துவட்டு ஏரியால அத்துன  பேமசு . கந்திரி பொற பொறந்துட்டா பத்தரு ஊட்டுல மணக்க மணக்க தேங்கா சோறு ஆக்கிடுவாக . நெல்லு காய போடுற பாய விரிச்சு அது மேல  வெள்ள துப்பட்டி துண்ட விரிச்சு சோத்த கொட்டி விடுவாகா . சோறு ஒன்னுக்கொன்னு ஒட்டிக்காம இருக்க பாய் பூரா அத பெரிய ஆப்பய வச்சு  கிளறிவிடுவாக.  ராவுத்தரப்பா பள்ளியாசல்ல நிக்குற  ஏழ பாழயல்களுக்கு பொங்குசு பைல போட்டு கொடுப்பாக ! சில வேரு பெரிய குட்டாண்ல வாங்கிட்டு போவாக ."

                 

      "மக்கே நாளு கொடியேத்தம்.  ராவுத்தரப்பா பள்ளியாச எதித்து  தெக்க பாத்தாப்ல அவுக மூத்த மவன்  தடிம்சாய்வ அப்பா அடங்கி இருக்காக.  ரெண்டாவது மவன் நெய்னா மம்மது சாய்பு அவுக இங்கேருந்து இருவது மைலு தூரத்துல இருக்குற  பாசிப்பட்டணத்துல அடங்கி இருக்காக .தடிம்சாய்வ அடக்கத்துக்கு கிழக்கால கடக்கர ஓரமா மூணு திண்டுகல்லு போட்ட மாதிரி உயரம் . அந்த திண்டுகல்லுல இரவத்தஞ்சு அடி உயரத்துல ஒரு கம்பு ஊண்டுவாக . அதுக்கு மேல இன்னொரு கம்ப இணைச்சுடுவாக. அம்மாம்  பெரிய உயரக்கம்புல ஒரு ஆளு ஏறி அப்பாவோட கொடி ஏத்துவாக . "

            "அதுக்கு மொத நாளு நடுத்தெருவுல கொடியேத்தம். ரெண்டு ஓங்குன மரத்த பதினஞ்சடி உயரத்துல கூட்டுக்கொட்டாய் முன்னாடி ஊண்டுவாக . அந்த மரத்த ஊண்டி நாலு பக்கமும் கவுத்த வச்ச கட்டி அழுத்தமா ஊண்டிடுவாங்க. அது பேரு கொடிமரம் . சந்தனக்கூடு செய்யுற எடம் பேரு தான்  கூட்டுக்கொட்டாய் நடுத்தெருவுல இருக்கு .  இங்க தான் ராவுத்தப்பா கூட்டுக்கு சப்பரம்,பொன்னிகொடம்லாம்  செய்வாங்க. சந்தனக்கூட்டுல சப்பரம் ரெண்டு இருக்கும். சப்பரத்துல கலர் பேப்பர்,ஜிகுனா  ஒட்டிய கண்ணாடிகள் இருக்கும். சப்பரத்துல குறுக்க நெடுக்க மூங்கி கம்பு வச்சு ஜன்னலு மாதரி சட்டம் செய்வாக.  பனமரத்து பாலைய தண்ணில ஊற வச்சு சின்னசின்னமா கம்பு கட்டுற சாரம் மாதிரி அதுல ஈக்கி கிழிப்பாங்க. அந்த ஈக்கிய வச்சு இந்த கலரு கண்ணாடி எல்லாம் அந்த மூங்கி சட்டத்துல கட்டி வட்டமான அமப்பாக்கி  கெணத்து உற மாதரி செய்வாங்க . அப்பொறம் சப்பரத்துக்கு மேல வரும் பொன்னி கொடம்.  அதுவும் கலரு கண்ணாடி டிசைன்ல பெரமிடு மாதரி இருக்கும் . சப்பரத்த ஒன்னுக்கு மேல ஒன்னா மாட்டு வண்டில அடுக்கி அதுக்கு மேல பொன்னி கொடம் வச்சா அதான் ராவுத்தரப்பா கூடு. இந்த சப்பரத்த மாடு கட்டுன கூட்டு  வண்டில அடுக்குறதுக்கு தான் இந்த கொடிமரம். கொடிமரம்  ரெண்டுக்கும் நடுவுல சப்பரத்த ஒண்ணு ஓண்ணா கயித்துல கட்டி கூட்டு வண்டிக்கு சாம்புவாங்க. ராவுத்தரப்பா கூட்டு சப்பரத்து குள்ள ரெண்டு ஆளுக நின்னுக்குட்டு பொன்னி கொடத்த கூடு போறப்ப சுத்தி வுடுவாக . பாக்கவே நல்லாருக்கும். கொடியேத்தம் அன்னக்கி போற அந்தக்கூடு பேரு ரதம்னு சொல்லுவாக . ரதம் போவயில அது மேல சனங்க  மல்லியப்பு வீசுவாக.   நாங்கூட ஒருதடம் கூடு செய்ற சேக்காதி அண்ணன்ட்ட கெஞ்சி கூத்தாடி ஒருதடம் ரதம் உள்ள  போயுருக்கேன். சனங்க மல்லியப்பூவ  கூட்ட நோக்கி வீசுனா அது சப்பரத்தோட கலரு கண்ணாடி ல வந்து தும்பி மாதரி ஒட்டிக்கும். நாங்க அந்த மல்லியப்பூவ எடுத்து சனங்க மேல திருப்பி வீசுவோம்".


                " பொற பொறந்து பத்து பதிணஞ்சு நாளக்கி சிறுசுக,இளசுக ,பெருசுகனு கூட்டம் கூட்டமா  கூட்டுக்கொட்டாய் க்கும் ராவுத்தரப்பா பள்ளியாசலுக்கும் நடயா நடக்கும். ராவுத்தப்பா பள்ளியாச எதுத்த மாதரி பெரிய தெடலு இருக்கும் அங்க இந்த பத்து பதுணஞ்சு நாளக்கிம் கடல கட ,பொரிகட ,முட்டாசு அலுவா கட, பொண்டுவ மட்டும் போற கண்ணாங்கட. கண்ணாங்கட யுல பொண்டுவலுக்கு உள்ள ரப்பர் ,ஏருபின்னு லேர்ந்து வாழக்காசட்டி ,மாவரிபட்ட ,இடியாப்பம் கொழக்கிற கம்புனு ஏராளமான சாமான் நெறஞ்சு கெடக்கும் . அது போவ ஒருவா ஊஞ்சா ,குதிர ஊஞ்சா ,புள்ளய ஆடுற வாத்து ஊஞ்சா னு ஒரு பக்கம் . இளசுக கத்திக்கிட்டே ஆடுறதுக்கு உசர ராட்டணம் ஒரு பக்கம்.  சர்க்கஸ் ஒரு பக்கம்னு அந்த திடலே நெறஞ்சு கிடக்கும் "
" அந்த திடலேர்ந்து கூட்டுக்கொட்டாய் வழிலே ஆட்டாம்பொட்ட . இந்த பொட்டல் தான் கூடு கொடியேத்தம் அன்னைக்கு பகல்லயும் ,கந்திரி அன்னக்கி விடிகாலயுலயும் நிக்கும் .  கூடு நின்னா வாண வேடிக்க பாக்க சுத்துவட்டார சணம் எல்லாம் கூடிடும்.ராவுத்தரப்பா கூடு இந்த பத்து பதிணஞ்சு நாளுல ரெண்டே தடவ கூட்டு கொட்டாயிலேர்ந்து ராவுத்தரப்பா பள்ளியாசலுக்கு ஊர்ஓலமா போவும். ரதமா கொடியேத்தம் அன்னக்கி.  அப்பொறம் ரதம் சந்தனகூடா லைட்டுலாம் கட்டி கந்திரி  ராத்திரி அப்ப மாறிடும் . அது சந்தனகூடாயிடும் ".


           "நம்மூரு பொண்டுவ இந்த பத்து பதிணஞ்சு நாளும் கஜினி மம்மது படை எடுக்குற மாத்ரி தெனமும் சனம் ராவுத்தரப்பா பள்ளியாசலுக்கு படையெடுக்கும் சாமான் வாங்க ".
"அன்னக்கி அப்புடி ஒரு சண்ட முஸ்தபா மாமவுக்கும் சொவரா மாமிக்கும் . மாமி மாமாவ ஒருமையுல திட்டி வீட்டு கதவ நாரங்கி போட்டுடாக ".


    "மாமாவும் அந்த திருகோணமல குடும்பத்து ரெண்டு பொண்ணுங்களும் என்ன செய்வதுனு தெரியாம முழிச்சுட்டு நின்னாங்க ".
                       (தொடரும்)

Monday, 26 January 2015

ஆரீபு காக்காவும் ரஸூல் ஊதுபத்தியும் - தொடர்கதை -2


       

                                 


      சற்று பரபரப்புடன் இது போன்ற ஒரு தருணத்தில் தான் கலிமாவிடம் நடந்ததை கூற முற்பட்டார். அன்றைக்கு இக்பால் தெருவில் தான் வியாபாரம். 


" தேங்கா மூடி வூட்டு காஜரா ரெண்டு இடியாப்ப தட்டும் நாலு ஓலை குட்டானும் வாங்குனாக "

        ஊதுபத்தி, மாவரிபட்டை இடியாப்ப தட்டு, உறை ஆரீபு காக்காவோட  கைவரிசை என்றால் பனை ஓலை குட்டான் ,தட்டுகள சேவும்மாவோட  கைவரிசை .

               ஆரீபு காக்கா விடம் வியாபாரம்  செய்யும் பொருட்களுக்கு பெண்கள்  கேட்க்கும் விலை பேரத்தில் கட்டுபடியாகமல்  இப்படி சொல்லுவார்.

        " சேவும்மா பொட்டி மொடயுற அழகே தனி தான் அது மேல எவ்ளோ காசு வந்தாலும் ஈடாவாது தாயீ ! பனை ஓலய கூணா மீனா தோப்புல காலயுல போய்  பொறக்கி  வந்து அத அருவா வச்சு சீச்சடுவா. பொறவு  பச்சை கலரு , ரோசு கலரு னு சாயத்த சத்தரத்துல வாங்கிட்டு வந்து அந்த பன ஓலய அதுல நனச்சு போட்டு ஊரும்".

                            


          "மறுநா காலயுல அத வெயில்ல நெல்லு காய போடுற பாயுல நெல்லோட சாய ஓலையும் சேர்ந்தாப்ல  காயும். காஞ்ச பொறவு அத சட்டுவா கத்தி வச்சு கிளிச்சா ஈக்கி தனியா  கீத்து தானா பிரிஞ்சிடும். ஈக்கிய ஓரத்துக்கும் கீத்த அடுத்தடுத்தாப்ல ஒவ்வொரு கலரும் வர்ர மாதிரி. குட்டானயும் தட்டயும்  மொடஞ்சிடும் சேவும்மா.  அந்தா குட்டான் ஒவ்வொன்னும் பத்து மரக்கா நெல்லு தாங்கும். அவ்ளோ வலு.  காச பாக்க வேணாம் காஜரா ! அவ்ளோ ஜோரான குட்டான்.  "

            "காசு குட்டானுக்கு இல்ல தாயி ! காலயுலே இத வித்து நாலு காசு பாக்கணும் னு நெனச்சு சுத்துறோம். உச்சுருமுற நேரத்துல காடு கண்ணி னு சேவும்மா சுத்துறா. அவ சுத்தி அடுப்பு எரியுற துக்கு  நாலு சுள்ளி வெறவும் , இந்த பன ஓலயும் பொறக்குவா.அத நேரம் காலம் பாக்காமா காலயுல நீச்சி தண்ணி குடிச்சுட்டு ஊரு பூரா அலஞ்சு விக்குறேன் . அலச்சலுக்கு தான் அஞ்சு ரூவா சேத்து கேக்குறேன். " சொல்லி முடித்தார் ஆரீபு காக்கா.

                         

        தேங்கா மூடி காஜரா மனிபர்சுலேர்ந்து அவுக  கேட்ட வெலயும் குறச்சு  கேட்ட அஞ்சயும் சேத்து மொத்தமா  கொடுத்துட்டு தன் ஊட்டுக்கு நடைய கட்டுனா.

          சில நேரங்களில் மனிதன்  சமூகத்திடம் பேசும் போது உண்மை நிலையை மறைத்துக் கொள்ள சில ஒப்பனைகளை கையாள்கிறான். வியாபார புன்னகை, அடுத்தவனை கவிழ்த்தும் விஷம புன்னகை, தன் கஷ்டத்தை மறைக்கும் சகிப்பு புன்னகை  என்று நிறைய ஒப்பனைகள் மனிதனுக்கு  தேவைப்படுகிறது.எப்படி எனில் பருவகுமரிகள் தன்னை பெண் பார்க்க வருகிறார்கள் என்று அறிந்தவுடன்  தன் முகப்பருக்களையும் கருவளையங்களையும் மறைத்து ஒப்பனை செய்யும் விதம் போல்.  உண்மை நிலை உலகம் கண்டால் அதனை ஏற்றுக் கொள்ளும் தைரியம்  அதற்க்கு  இல்லை. அனைத்துக்கும் பொய்முலாம் பூசியதால் தான் உலகம் எதார்தத்தை இழந்து நிற்கிறது.  அது எதார்த்த மனிதர்களையும் விட்டு வைக்க வில்லை  முகச்சாயத்தை  பூசி விடுகிறது .

          ஆரீபு காக்கவும் அது போன்ற ஒரு முகபாவனையை தான் மையாக தன் முகத்தில் பூசியுள்ளார். அது யாரையும் கவிழ்த்துவதற்க்காக போட்ட ஒப்பனை அல்ல. சில குட்டான்களையும் ஊதுபத்திகளையும் மாவரிப்பட்டைகளையும் விற்பதற்க்காக தந்திரமாய் சிரித்து தன் கவலையை மறைத்து வாங்க வரும் பெண்களிடம் தன் புன்னகை உதிர்க்கும் இன்முக ஒப்பனைக்கு சொந்தக்காரர் ஆரீபு காக்கா.

                  தன் நினைவுகளில் இருந்து மீண்டவாறு  ராவுத்தரப்பா பள்ளிவாசலில் தன் துண்டை விரித்து படுத்த வாறு பழைய பொழுதுகளில் மீண்டும் தன் சைக்கிளோடு பயணிக்கிறார்.


"அன்னக்கி தேங்காமூடி ஊட்டு காஜராக்கு குட்டான வித்துட்டு சைக்கிள கிளப்புனேன் "

"அல்லாவு அக்பரு "  என்று மதிய வேளை தொழுகைக்கு அழைப்பு .

                            

                      
         " சின்ன பள்ளியாச அன்சாரப்பா மைக்ல பாங்கு சொன்னா  மைக்கே தேவயில்ல. அவருக்கு மக்காவுல பாங்கு சொல்றதா நினச்சு தனக்கு வந்த அத்தன ராகத்துலயும் கத்திக்கிட்டே இருந்தாரு . அவரு கத்தி கத்தியே அவரோட வெங்கல குரல எங்கட ஜனங்களுக்கு பழவிபோச்சு."
"சில நேரத்துல மைக்ல அன்சாரப்பா ஒலறியும் கொட்டுவாரு . அத்தா இறந்தா மவுத்து செய்திய அன்னரோட மவன் மவுத்தாயிட்டாருனு கொழப்பி  அடிப்பாரு . EB ல லைட் பில்லு கட்டுற செய்திக்கு பதிலா  தாயுமார்கள் அனைவரும் ஆஸ்பத்திரிக்கி போய் பில்ல கட்டுங்க னு பொண்டுவ மூளய கலங்க மலங்கடிப்பாரு . எதயும் மைக்ல கொளப்பி விட்டு அனவ்ன்ஸ் பண்றது தான் அன்சாரப்பா வாடிக்கை " .

           அபஸ்வரங்களை பழகி கொண்டால் அதுவே பிற்காலத்தில் அதல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்க்க இயலாது. அது போல தான் அன்சாரப்பா பற்றியும் ஆரீபு காக்காவுக்கு தோன்றியது.

                  "ஒடம்புக்கு சொகவீனம்னு ஒரு தடவ  அன்சாரப்பா அவ்களோட மக வீடு இருக்குற அம்மாடம் போய் அஞ்சு நாளாச்சு. அவுகளுக்கு பதிலா சுருட்டப்பா தான் சின்னபள்ளியாச ல்ல மொய்சாப்பா. இனி அவரு சொல்றது தான் சின்ன பள்ளியாசல்ல  பாங்கு போங்குலாம். மொத மொதல்ல அவரு பாங்கு சொல்ல போனா  அல்லாவு அக்பருனு  சொல்ல வாயே  வரல.  பாவம் வராமா மைக் முன்னாடி முழிச்சுட்டு இருந்தாரு. துண்டு சீட்டுல எழுதிக் கொடுத்த அப்பொறம் ஒரு வழியா சுருட்டப்பா அரங்கேத்தத்த சின்னபள்ளியாச மைக் ல முடிச்சு வச்சாரு " .

            "அன்சாரப்பா இல்லாத பத்து நா நல்லாவே இல்ல அவரோட கொழப்படி அனவுன்ஸ்மன்டும் கத்திக்கிட்டே ஓதுற பாங்கும் தான் இந்த ஊரோட அழகு, அடயாளம் எல்லாம் ".

           "ஒரு வழியா அன்சாரப்பா பத்து நா கழிச்சு வந்து சின்னப்பள்ளியாச ல்ல பாங்கு சொன்னதும் தான் எங்கூட்டூ ஆட்டுக்குட்டிய வெப்பங்கொல திங்குதுனு இளந்தாரி பயலுக ஆலமரத்தடில பேசிகிட்டானுவ. எனக்கு அடக்க முடியாத சிரிப்பு அது  தான் நான் கடேசியா சிரிச்சது .

ஆரீபு காக்கா சைக்கிள் கோனார் கடையில் நின்றது .

"கலிமாவுக்கு கோனார் கட போண்டானா ரொம்ப இஷ்டம் . இந்த ரஸூ பய பல்லிக்கொடம் போயிருப்பான் " .

                  அவனுக்கு ஒன்னு ,கைஜம்மாக்கு ஆரிபாக்கு ஒன்னொன்னு  வாங்கிட்டு சேவும்மாவுக்கு போண்டாவொட உளுந்து வட யும் ஆடர போட்டு கோனார் கையுல அஞ்சு ரூவாவ திணிச்சுட்டு லுவர் தொழுவைக்கு நேராக வண்டி சின்னப்பள்ளியாச போயி நின்னது.

அன்சாரப்பா இக்காமத் பலமாக ஒலித்தது.
"அல்லாவு அக்பரு ..."
அன்றைய தினம் வேகமாய் தொழுகைக்கான ஒது கைகால்களை கழுவிக்கொண்டு  உள்ளே நுழைந்து ஹஜ்ரத் தொழுகைக்கு பின்னே சேர்ந்த்துக்கொண்டார் ஆரீபு காக்கா.


    சடாரென்று பல்லி தலையில் விழ ராவத்தரப்பா பள்ளிவாசலில் கோழிதூக்கம் போட்டு கொண்டிருந்த ஆரீபு காக்கா  அன்சாரப்பா வோட தொழுகை யில் நின்றதும் பழைய நினைவுகளை  நினைத்ததையும் பழையனவற்றில் மீண்டவாராக  ரஹ்மத் பாய் கடையில் தண்ணி வாங்கி முகத்தோடு நினைவுகளையும்  சேர்த்து கழுவி கொண்டிருந்தார்.
ஆரீபு காக்கா நிகழ்கால நிசர்தசனத்துக்கு திரும்பியவராக ,

           "தன்னோட வெத்தல பொட்டிய தொறந்து கொஞ்சம் காசுகட்டி, குருவி போயிலை வச்சு  வெத்தல யுல சுண்ணாம்புலாம்  தேய்ச்சு வாயுல மடிச்சு மோள ஆடு கொலய திங்கிற மாதிரி  அரச்சுட்டு இருந்தாரு ".

மீண்டும் பழைய நினைவுகளில் ஆரீபு காக்கா ....

              "அன்னக்கி நான்  லுவர் தொழுவ முடிஞ்சு அல்லாகிட்ட அப்புடி  துவா கேட்டு இருக்க கூடாது . எம்புள்ள கலிமாவோட வாழ்க்கைய சீரழிச்ச சாவண்ணா வயும் அவ ஆயீ அப்பனையும் அழிச்சிடுனு கேட்டுபுட்டேன்  ..அப்படி அத அல்லாவு கபூலு செஞ்சு அது பலிச்சிடுச்சுனா எம்புள்ள கலிமாவுக்கு கருசமணி அருந்துபோவும், அப்பொரம்  எம்பேரப்புள்ளக்கிம் வாப்பா இல்லாம போயுடும். யா ரப்பே ! என்னோட துஆ வ நிராகரிச்சுடு அதுக்கு பதிலா அந்த சாவண்ணா பயல  இந்த ஊரோட இழுத்துட்டு வந்துரு ".

        " யாரோ மலசியா வுல மலாய்காரீ ஒருத்தியாம் . சாவண்ணாவ வளச்சு போட்டுட்டாளாம் . மலாய்காரி எந்திரினா எந்திரிக்கிறானாம் ! உக்காருனா உக்காரானாம் . சாவண்ணா முடி,நகத்த  வச்சு அந்த மலாய்காரி செய்வின செஞ்சுட்டாளாம் ".

"சாவண்ணா பாக்குறதுக்கு அச்சு அசலா  அவன் தாயுமாமன் என்ன மாதிரியே இருப்பான் ".

           "அந்த காலத்துல அரபு யாவாரி ஒருத்தரு கோட்டபட்டணத்துக்கு வந்தாராம் .   இந்த ஊரு மீன்காரிய முஸ்லீமா மாத்தி கலியாணம் பண்ணிணாராம். அதுலேர்ந்து  வந்தது தான் இந்த வமுசம்டா னு எங்க அத்தா அடிக்கடி சொல்லுவாரு . அந்த அரபு ரத்தம் தான்  சாவண்ணாவ மலாய்காரிக்கு முவ லட்சணமா காட்டியிருக்கும் ".

                                  

             "நானெல்லாம் சிலோன் நாராமலயுல மூட்ட தூக்குனா அத்துன சிங்களச்சுகளும் வச்ச கண்ணு வாங்காமா பாப்பாளுக.  சிங்களச்சிவ எல்லாம் பேச்சு கொடுப்பாவா ஆனா அவளுக்கிட்ட சொல்லுவேன் "

        "அழகா இருக்குறது மட்டும் தான்  என்னட வம்சத்து அரபு ரத்தம் இல்லடி.  உன்ன  மாதிரி ஆளுங்க ஒழுக்கமில்லாம நடந்துக்கிட்டா பேசமா ஒதுங்கிக்க சொன்னதும் அந்த அரபு ரத்தம் தாண்டி "  அப்படியென்று ஆரீபு காக்கா தன்னுடைய அத்தா தன்னை  வளர்த்த விதம்  பற்றி மனதில் சிலாகித்து கொண்டார்.


         "அத்தா  ரொம்ப கண்டிப்பானவரு. எத்தனையோ பேரு சிலோன்ல அவர ரெண்டாம் கலியாணம் பண்ண சொல்லி அழுத்தம் கொடுத்து  இருக்காங்க. அதுல முக்கியமான ஆளு எங்க ஊரு முஸ்தபா மாமா ".

முஸ்தபா மாமா சிறிது காலத்திற்கு முன் இறந்து போனார்.

          "முஸ்தபா மாமாக்கு ஊருல ஒரு கலியாணம் . திரிகோணமலயுல ஒரு கலியாணம் னு ரெண்டு குடும்பம் அவருக்கு. எங்க அத்தாவும் முஸ்தபா மாமாவும் தான் மொத மொதல்லா கொழும்புக்கு எங்கூர்லேர்ந்து கள்ள தோணில தலமன்னாரு போய் இறங்குனவங்க . எங்கூர்லேர்ந்து தலமன்னாரு சரியா 30 மைலு ராத்திரி வத்தயிலே ஏறுனா இந்தியா பார்டர் போய் காலயுல சேரும். பொழுது விடிஞ்சாப்ல சிங்கள காரன் போட்டுக்கு போயிடலாம் . அங்குனேர்ந்து அஞ்சு ரூவா கொடுத்தா சிங்கள காரனுவ போட்டு தல மன்னாரு ல இறக்கி விடும் "
                                                                                                                                           (தொடரும்)
     
  

Sunday, 25 January 2015

ஆரீபு காக்காவும் ரஸூல் ஊதுபத்தியும் - தொடர்கதை -1


     


 "லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் " என்று பெருமூச்சு சங்கீதமாய் விட்டுக்கொண்டே  சைக்கிளை கூட்டு கொட்டாய் முக்கத்தில் ஏற்றி  மேட்டில் இறக்கிய போது சைக்கிளோடு தன் மனக்குறையும் இறக்கத்தில் ஒவ்வொன்றாய்  இறக்கி கொண்டே வந்தார் ஆரீபு காக்கா. 

         "இன்னக்கியோட 20  வருசம் ஆச்சு கோட்டபட்டணம் வந்து. கொழும்புல என்னக்கி குண்டு போட ஆரம்பிச்சானோ அன்னக்கி நம்ம வாழ்க்கையிலயும் துண்டு உழுந்துருச்சு . சிலோன்ல நாரமலயுல உள்ள பலசரக்கு கடைய போட்டா போட்டபடி அன்னக்கி கிளம்பி வந்தது தான்".


            மனம் சில நேரங்களில் நண்பனாக மாறிவிடுகிறது . தான் என்ன பேசினாலும் சில நேரங்களில் கூட தன் மனைவி சேவும்மா எதிர்த்து பேசுவாள் . ஆனால் மனம் ஒரு போதும் எதிரொலித்ததில்லை. எல்லா நேரங்களிலும் நாம் எடுக்கின்ற முடிவுகளுக்கு தலையாட்டுகின்ற மனைவியும் நண்பர்களும் கிடைப்பது அரிது. ஆனால் மனது எல்லா நேரத்திலும் உடன்பட்டு நமக்காக அதுவும் இசைந்து கொடுக்கிறது . எத்தனை சபைகளில் ஆரீபு காக்கா அடக்கி வைத்த வருத்தங்களை கொட்டி இருப்பார் அத்தனை சபைகளும் எதையாவது இலவசமாய் ஒன்றுக்கும் உதவாத ஆலோசனைகளை கொடுத்து அவரை நிராகரித்திருப்பதின் வலியை  அடிக்கடி ஆரீபு காக்கா இப்படி சொல்வார். "ஓசணை தான்யா இந்தா ஒலகத்துல எல்லா பயலுவலும் தாராளமா அள்ளிக் கொடுக்குறது . காசு பணத்த கேட்டா துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடிருவாங்கே ".

        ஆரீபு காக்கா தன் மனதை தான் குறைகளை கொட்டும் பாத்திரமாக வைத்துக் கொண்டார் விமர்சனங்களை விரும்பாத காக்கா.

          ஊருக்கு வந்த நாள் முதல் ஆரிப் காக்காவுக்கு பொழப்பு தழப்பு  எல்லாம் இந்த சைக்கிளில்  தான் .

          "சிலோனுக்கு அப்புறம் நமக்கு சைக்கிள்ல ஊரு ஊராய் போய்  இந்த இடியப்ப ஒற மாவரிப்பட்டை விக்கிறது  அப்புறம் இந்த ரஸூல் ஊதுபத்தி "
"கோட்டபட்டணத்துல உள்ள எல்லா பொண்டுவலுக்கும் ஆரீபு காக்கா இடியாப்ப ஒறனா ரொம்ப இஷ்டம் இடியாப்பம் அவ்ளோ நைசா இருக்கும் ஒன்னுக்கொன்னு ஒட்டாது.  மாவரிப்பட்டைய வச்சு சளிச்சா கப்பி மாவும் பருமாவும் தானா  பிரிஞ்சுரும் . மருமவனுங்க வெளிநாட்டுலேர்ந்து வந்தா அவங்கள கைக்குள்ள போடுறதுக்கு ஆரீபு காக்கா மாவரிப்பட்டயும் இடியப்ப ஒறயும் போதும். பொண்டுவலுக்கு.  ஆசரா மாசம் வந்தா பாத்தியாவுக்கு பருமாவு வச்சு கொழக்காட்ட புடிப்பாவ. கப்பி மாவுல செஞ்ச  இடியப்பத்துக்கும் கணவா ஆனமும் வச்சா மசங்காதா ஆளு ஊருல இருக்கா ".

     சைக்கிள் மெல்லமாய் ராவுத்தரப்பா தர்கா நோக்கி நகர்ந்தது கூட அவரது நினைவும்.

         பொதுவாக ஏழைகள் என்றால் அவர்கள்  வலிகளை ஒப்புவிக்கும் போது பெரும் பேச்சு பேசும் தனவந்தன் கூட ஊமையாகி விடுகிறான். காசு பணங்கள் ஆட்டுவிக்கும் உலகத்தில் ஏழைகளின் உதவி கோரல்கள் பெரும் செல்வந்தர்களின் பேச்சுக்களையும் அவர்களின் கைகளின் தயாளத் தனத்தையும் முடக்கி போட்டுவிடுகிறது. யாது செய்வதென அறியாமல் கூழங்களை கொட்டி அதனை பொறுக்குவது போல் ஏழைகள் தங்களது கவலைகளை குப்பை கூழங்கள் போல் வழியெங்கும் கொட்டிவிட்டு காலார ஊர்ந்து அதனை பொறுக்குவது தான் உலக  இயல்பு . சற்று வித்தியாசமாக ஆரீபு காக்கா, அவரது சைக்கிள் டயர் அவருடைய கவலைகளை காற்று அழுத்தி பாதையெங்கும் தேய்த்து கொண்டிருக்கிறது .

இது போன்ற கவலைகளை வழியெங்கும்  கொட்டி பொறுக்கும் காலார ஊர்திகள் நிறைய கோட்டைப்பட்டிணத்தில் உண்டு.

ஆரீபு காக்காவுக்கு மொத்தம் மூன்று  பிள்ளைகள் .

"மூத்தவ கலிமா இளையவ ஆரீபா நடுவுல உள்ளவ கைஜம்மா".

           

       "கலிமா அவ உம்மாவுக்கு ஒத்தாசய இருப்பா.  தங்கச்சி மவன் சாவண்ணாவ தான் அவளுக்கு கலியாணம் பண்ணி வந்தேன். வருசம் ஆறு ஆவுது. தங்கச்சி ஜொஹரா மவன் தான். மொத்தமா கக்கூலி 1 லச்சமும் பைக் காசு 50 ஆயிரமும் ரொக்கமா ஒன்ட்ரை வாங்கிட்டு தான் அவ ஊரு ஜமாத்த முடிவு பண்ணவுட்டா. இல்லனா மாப்புளய குதிரயுல ஏத்தமாட்டேன்னு கறாரா சொல்லிட்டா . சிலோன்ல நான் இருந்த அப்ப தங்கச்சி ஜொஹராவும்  மச்சான் ஜமாலும் எவ்ளோ உதவிக்கு வந்தப்ப நான் என்னைக்கும் கறாரா இருந்ததில்ல. ஆனா கலியாண  விஷயத்துல ரொம்ப கடுமயா நடந்துக்கிட்டாங்க  ".

          " கலியாணம் பண்ணதுலேர்ந்து விட்டக்கொற தொட்டக்கொற தான் என்னோட கூட பொறந்ததுக்கு  . பாவம் கலிமாவோட  வாழ்க்கை இருளடஞ்சு போச்சு .  சரியா கலிமாவுக்கு  ரஸூல் பொறந்ததும் ரெண்டாவது வருசம் சாவண்ணா மலசியாக்கு போனான். ரொட்டி போட பனக்குளத்து ஆளுங்க கிட்ட கலிமா வோட 10 பவுன சொசைட்டி பேங்ல அடகு வச்சு 2 லட்ச ரூவா தோட்ட பர்மிட் எடுத்து போனவன் தான். அதுக்கப்புறம் ஓசர வார்த்தைக்கி கூட ஒரு போனு பண்ணல . நோம்பு பெருநாளக்கி கிப்ஸ் வேட்டி மார்ட்டின் சட்டனு ஆஸரா ஹஜ் பெருநா னு ஒரு சீர் உடாம வாங்கிகிட்ட என்னோட பொறந்தவ சாவண்ணா போனதுக்கப்புறம் என்ன ஏதுனு கூட கேட்டதில்ல ".


        " ஒருநா பள்ளியா கொள பொம்பள தொறைக்கு துணி தொவைக்க போன எம்புள்ள கலிமாவ நாக்குல விசம் வைச்சு ஜொஹரா பேசிப்புட்டா. பேச்ச கேட்டா கோவம் வராதவனுக்கு கோவம் வரும் .  அந்த வெவரத்த பக்கத்து ஊட்டு மருயம்மா  சொன்னதும் எம்புள்ள கலிமாவ என் ஊட்டுக்கே  கொண்ணாந்துட்டேண் ".

         போறப்ப நாக்க புடுங்குற மாதிரி சேவும்மா நாலு வார்த்தை கேட்டா ஜொஹராட்ட. "ஓடுகாலி உன் புள்ளயா?  இல்ல  என் புள்ளயா னு ?". 


          சாவண்ணா மலேசியா போய் இரண்டு வருடங்களுக்கு மேல் உருண்டு விட்டன.  எத்தனை சுமைகளை சுமப்பது ஆரீபு காக்கவுக்கு . பத்து மாதப் பாரம் தான் கர்ப்பிணிகளுக்கு ஆனால்  அதை காலம் முழுதும் சுமக்க வேண்டியது  ஆரீபு காக்கா போல் எத்தனை தகப்பன் மார்கள்.
எத்தனையோ பொம்மைகளை பேரன் ரஸூலுக்கு ஆரீபு அப்பா வாங்கி கொடுத்தும் அவன் ஆசையாய் வாங்கி கேட்டது  "எப்பப்பா சாவண்ணா வாப்பா வரும்" .  நிராசாயாய் ஆரீபு காக்காவுக்கு நின்றது பேரன் ரஸூலின் கனவு.

                   

              கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே சைக்கிளை கிளப்பிக் கொண்டு ராவத்தரப்பா தர்கா வந்து சேர்ந்தார் . ரஹ்மத் கடை பாயிடம் வாங்கிய டீயை உறிஞ்சுக் கொண்டே மீண்டும்.

          "மலேசியாவுல எத்தனையோ பேருகிட்ட சாவண்ணா பத்தி விசாரிச்சும் ஒரு தாக்கலும் இல்ல. ஒருநா  நம்ம தாயபுள்ள வூட்டு முஜீபு போன் பண்ணி இருந்துச்சு .  அப்ப தான் சாவண்ணா பத்தி அந்த சேதிய சொன்னுச்சு".

       "அந்த தாக்கல கேட்டதுமே எனக்கு கிறுக்கு புடிச்சுருச்சு இந்த சேதிய நான் எப்படி எம் புள்ள கலீமாட்ட சொல்லுவேன் . அது வாயில்லா அப்புராணி".

ஏழைகள் என்றால் எத்தனை பாரங்கள் எத்தனை திசைகள் இருக்குமோ அத்தனை திசைகளில் இருந்தும் அத்தனை பிரச்சினைகள்.

"மனச தேத்திகிட்டு அன்னைக்கு வீட்டுக்கு போனேன். போறதுக்கு முன்னாடி பல ஒத்திக பாத்துகிட்டேன் ஒன்னுக்கு மூணு மொற   "
                                                                                                                                 (தொடரும்)

அவசர தேவை இதய சுத்திகரிப்பு


             இஸ்லாம் என்று சொன்னாலே சாந்தி , அமைதி என்று பொருள் அதன் காரணத்தினாலே இஸ்லாம் வாழ்வியல் சிந்தனையும் சமூக நெறிகளையும் போதிக்கும் மனிதன் கடந்து செல்ல கூடிய உன்னத பாதையாகவே நமக்கு கொடுத்துள்ளார்கள் நம் கண்ணியமிகு ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

          அன்பையும் மனிதமும் மூலதனமாக செயல்படும் இம்மார்க்கத்தை இன்று வேறு விதமான அர்த்த தெரிவுகளில் புரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலைகளில் நாம் தள்ளிவிட்டு  வேடிக்கை பார்கின்றோம்.நம்மை மற்றவர்கள் ஒரு வெறுப்பான சூழ்நிலையிலே சூழலிலே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் .

     எதனால் இத்தகைய இழப்பு ? நம்முடைய சுய அடையாளத்தை இழந்ததன் விளைவு என்ன
                            






           அய்யாமுல் ஜகீலியா கோர தாண்டவம் ஆடிய அரேபிய தீபகற்ப்பத்தில் மாற்றம் ஒன்று மாற்றம் தேடிய போது இருள் போக்கும் விடிவெள்ளியாக பிறந்தார்கள் .  அன்னாரின் பிறப்பு அந்த சமுதாயத்திற்கு இதய அறுவைசிகிச்சையாக திகழ்ந்தது அதன்விளைவு இன்று நம்மில் ஈமானின்  சுவாசம் தரிபட்டு கொண்டு இருக்கின்றது.
 
    இதய அறுவை சிகிச்சை என்பது இன்று நம்மில் பல பேர் இரத்த நாளங்களின் அடைப்பு காரணமாக அதனை செய்து கொள்கின்ற  சிகிச்சை நம் ஞாபகத்திற்கு வருகிறது.ஆனால் பூமான் நபிகள் இந்த சமுதாயத்திற்கு செய்த சிகிச்சை இதய சுத்திகரிப்பு என்னும்அக சுத்திகரிப்பு சிகிச்சை.

      "உடலில் ஒரு சதை துண்டு உள்ளது அது சரியானால் மனிதனின் முழு வாழ்வும் சரி ஆகிவிடும் " என்று பொருள் படும் நபிகளாரின் பொன்மொழி ஒரு மனிதனுக்கு கல்ப் என்னும் அக பரிசுத்தத்தை எவ்வளவு முக்கியம் முழுமையாக கோடிட்டு காண்பிக்கிறது. எத்தனையோ இறைவசனங்கள் மார்க்கத்தை புறக்கணித்தவர்கள் பற்றி இறைவன் குறிப்பிடும் போது "அவர்களின் இதயங்களில் அவன் முத்திரை இட்டுள்ளான் " என்று பொருள்படும் அர்த்த கோர்வைகளை நாம் திருமறையில் கண்டு இருக்கின்றோம்.

"மனிதனின் மாற்றம் இதயத்தில் இருந்தே தொடங்குகின்றது ". என்று ஒரு அறிஞரின் எழுத்தை நாம் ஆமோதிக்க வேண்டும் என்று தான் தோன்றுகின்றது . எண்ணங்கள் எழும் புள்ளியிலே செயல்களின் உதயம் என்று கல்புடைய பரிசுத்தத்தை அவசியம் என்று மார்க்கம் போதிக்கின்றது.

            எண்ணங்கள் மற்றும் செயல்கள் அடிப்படையிலேயே நல்லோர், தீயோர் என்று இறைவனின் இறுதி தீர்ப்பு ரகசியமாய் அமைகிறது . நீ எதை விரும்புகின்றாயோ அதையே உன் சகோதரனுக்கும் விரும்பு என்று நபிகளார் சொல்வது நாம் இப்போது பிறர் நலன் அக்கறையில் நாம் எவ்வாறு செயல்படுகின்றோம் என்பதை நம் முகத்தில் அறையும் வாக்கியம் . எண்ணங்களே நற்பண்புகளுக்கு அடித்தளம் நாயகம் ரசூலே கரீம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 300 க்கும் அதிகமான நற்பண்புகளை
கொண்டுள்ளார்கள் என்றும் அதில் அதிகமாக பிறர் நலன்களை தன் நலன்களாக எண்ணும் போக்கு தான் அவர்களை அமீன் என்றும் சாதிக் என்றும் மாற்று மதத்தவர்களும் அழைக்கலாயினர். அவர்களை பின் தொடர்ந்த்த நபி தோழர்களும் அந்த அக சுத்திகரிப்பு முறையில் சிறந்தார்கள் . இன்று கூட பெருமானாரின் சுன்னத்தை பேணும் வாழ்வில்  தான் வெற்றி உள்ளது என்றும் பேணும் நல்லோர்கள் வரலாற்றின் முதல் பக்கத்தை பிடிகின்றனர்


    இன்றைய மக்களின் நிலை குறிப்பாக இளைஞர்களின் நிலை சுன்னத்தை தவற விட்டதால் மார்கத்தை பற்றி தவறான புரிந்துணர்வு வெளி உலகில் பரவி கிடக்கின்றதுநான் மார்க்கத்தை சுத்த படுத்தி தெளிவான மார்க்கத்தை போதிக்க போகிறேன் எனும் பேர்களில் பலர் தன்னை முதலில் சுத்த படுத்தி மார்க்கத்தில் இன்னும் நாம் தெளிவு பெற வேண்டும் என்று நினைக்கும் உள்ளங்கள் மிக குறைவு . அகசுத்தம் இல்லா மனிதனின் போதனை பிற மக்களுக்கு விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகிடும்.

         நாளை இறைவன் நீ எவ்வாறு மக்களுக்கு மார்க்கத்தை போதித்தாய் என்பதை விட மார்க்கத்தை கொண்டு நீ எவ்வாறு உன்னை பண்படுத்திகொண்டாய் என்று இறைவன் கேட்காமல் விடமாட்டான்.

        நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆன்மா மற்றும் கல்பின் பரிசுத்தம் மிக அபரிதமானது. அதனை கொண்டு அவர்கள் மற்றவர்களின் இதயத்தில் இஸ்லாம் எனும் அருள் தீபத்தை ஏற்றவும் முடிந்தது. அதே சமயம் அதை கொண்டே எதிரிகளின்  உள்ளத்தில் அவர்களை பற்றிய  பயத்தையும் போட முடிந்ததுஅது தான் உண்மையான   வெற்றி . நபிகளாரை பற்றி ஒரு வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகையில் பல்வேறு மலைகள் இடம் பெயர்ந்த வரலாறு நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் பல இதயங்கள் மனித நேயம் பக்கம்  புரண்ட வரலாறு அது நபிகளாரின் வருகை கொண்டே என்று நாம் வரலாற்றில் பார்க்க முடிகின்றது.


            எந்த கல்பை கொண்டு நபிதோழர் உமரின்(ரலியால்லாஹு அன்ஹு) கல்பை நபிகள்  நாயகம் புரட்டினார்களோ அதே கல்பை கொண்டே அபுஜஹீளின் உள்ளத்தில் அன்னாரை பற்றிய பயத்தையும் அல்லாஹ்வின் உதவியால் போட்டார்கள்.
          நாம் அல்லாஹ்வை அர்ஷிலே வைத்து விட்டு நாம் வெகு தூரம் விலகி நின்று கொண்டு இருக்கின்றோம். அல்லாஹ் திருமறையிலே மூமின்களின் கல்பே நான் அமர கூடிய சிம்மாசனம்(அர்ஷ்) எனும் பொருள் படும்படியான வசனங்களை அமைத்து உள்ளான்ஆனால் இன்று நம்முடைய நிலைமை கல்ப் என்னும் அக வீடு மனோஇச்சையின் பால் செயல்பட்டதன் விளைவு நம்முடைய நப்ஸ் களின் தீங்கான பெருமை , கர்வம்,அகங்காரம்,குத்திகாட்டுதல், புறம்,பொய்,அவதூறு,நையாண்டி பேச்சுக்கள் என்று நீண்டு கொண்டே போகிறது நம்முடைய அமல்கள்.
     மார்கத்தை ஏற்றுக்கொண்டு அதற்க்கு புறம்பான நடவடிக்கைகள் மேற்கொள்வது முனாபிக் என்னும் நயவஞ்சகர்களின் இரட்டை வேடதாரிகளின் பண்புகளுக்கு ஒப்பாகும்.
     ஹிதாயத்  என்பது அல்லாஹ்  தலா   இதயத்திலே  ஏற்படுத்துகின்ற ஒரு விசை அவ்விசை மற்ற மனிதர்களை நம் பால் ஈர்க்க செய்யும். அவ்விசையை   வலுபடுத்த வேண்டும் என்றால் நம்மை நாமே நமக்கு செய்து கொள்ள வேண்டிய இதய சுத்திகரிப்பு என்னும் அறுவை சிகிச்சை.
1.       செய்த தவறுகளுக்காக அல்லாஹ்விடம் வழமையாக பாவ மனிப்பு தேடல்.
2.       எந்த ஒரு காரியம் செய்யும் முன்னும் இதில் அல்லாஹ் ரசூலின் விருப்பம் எதுவாக இருக்கும் என்று ஆராய்ந்து அதன் பிரகாரம் காரியங்களை அமைத்துகொள்வது.
3.       அல்லாஹ்வுடைய தியானத்தை கொண்டே இதயங்கள் அமைதி பெறுகின்றன. எனவே கூடுமானவரை இறை திருநாமங்களை கொண்டு இதயத்தை ஆட்சுவாசப்படுத்துவது.
4.       பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் இறைவனிடத்தில் தேடுவது.
எல்லா தேவைகளையும் இறைவனே பூர்த்தி செய்கிறான் மேலும் அவனிடமே
மேற்கொண்ட தேவைகளை பூர்த்தி செய்யும் படி இறைஞ்சுவது.
5.       நப்ஸ்டைய தீங்குகளான அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடல்.

மேற்கொண்ட பயிற்ச்சிகளும் இன்னும் நாயகம் திருமேனி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி முறையிலும் நம்முடைய துரோகிகளான நப்ஸ் யும் சைத்தானையும் விரட்டி நம்முடைய அகத்தை சுத்த படுத்தி கொள்ள முடியும்.அத்தகைய பாக்கியத்தை நமக்கு என்றென்றும் தந்தருள்வானாக ஆமீன் !